Saturday, June 16, 2012

பிடதி ஆசிரமம் பார்க்கலாம் வாங்க! நித்தியின் கைதுக்குக் காரணம் ஜெயேந்திரர்?


ல்லாச் செய்திகளும் பிடதியை நோக்கி!
 பெங்களூருவில் இருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில் 32-வது கிலோ மீட்டரில் இருக்கிறது பிடதி. அனைத்துப் பஸ்களும் நின்று கிளம்புகின்றன. அங்கே இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் தியான பீடத்தின் நுழைவாயில் இருக்கிறது.
வாசலில் இருக்கும் காவலாளிகள், உங்களைப் பற்றிய அத்தனை விவரங்களையும் கேட்டுத் தெரிந்து​கொண்ட பிறகுதான் கேட்டைத் திறப்பார். செக்யூரிட்டி அறைக்கு அருகே இருக்கும் டேபிளில் ஒரு ரிஜிஸ்டர் இருக்கும். அதில் உங்களது பெயர், முகவரி, செல்போன் எண் என அத்தனையும் எழுதிக் கையெழுத்துப் போடவேண்டும். ஓர் அடையாள அட்டையில் உங்களது பெயரை எழுதி கழுத்தில் மாட்டிய பிறகுதான், உள்ளே செல்ல அனுமதிப்பார்கள். இந்த சம்பிரதாயங்கள் நடக்கும் நுழைவாயிலில் இருந்து ஒன்றரைக் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது ஆசிரமம்.
நீங்கள் சாதாரண பக்தராக இருந்தால் நடந்துதான் போகவேண்டும். ஆசிரமத்துக்கு நெருக்கமானவர்கள், வேண்டப்பட்டவர்கள் என்றால், செக்யூரிட்டி இன்டர்காமில் தகவல் சொல்வார். உடனே ஆசிரமத்தில் இருந்து கார் வந்து அழைத்துச் செல்லும்.
நடந்து செல்லும் வழியில் பிரமாண்டமான சிவபெருமான் சிலை இருக்கிறது. ஒரு பெரிய குளத்துக்கு நடுவில் சிவன் இருப்பதைப் போன்று வடிவமைத்து இருக்கிறார்கள். நித்தியானந்தரின் பிறந்த நாள் மற்றும் பௌர்ணமி தினங்களில் இந்த இடம் விழாக்கோலத்துடன் இருக்கும். நித்தியானந்தர் பட்டாடை உடுத்தி வந்து, சிவனுக்குக் குடம் குடமாக பாலும் தேனும் ஊற்றி அபிஷேகம் செய்வார். விடிய விடிய ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நடப்பதும் இங்கேதான். அதையும் கடந்து நடை போட்டால், முதலில் வருவது வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் தங்குவதற்கான விடுதி. அதை ஒட்டி ஓர் இலவச மருத்துவமனை இருக்கிறது. அதைத் தாண்டி உள்ளே செல்வதற்கு சில செக்போஸ்ட் இருக்கின்றன.
முதலில் ஆசிரமத்தின் பிரமாண்டமான வரவேற்பு அறை. யாரைப் பார்க்க வேண்டும், எதற்காகப் பார்க்க வேண்டும் என்று ஒட்டுமொத்த ஜாதகமும் கேட்பார்கள். அதன் பிறகு நீங்கள் சந்திக்க வந்த நபருக்குத் தகவல் சொல்லப்படும். அவர் விருப்பப்பட்டால், உங்களை சந்திப்பார். 24 மணி நேரமும் செயல்படும் இந்த வரவேற்பு அறைதான் பக்தர்களின் போனுக்குப் பதில் சொல்லும் கால் சென்டராகவும் இருக்கிறது. ஆசிரமத்துக்கு வரும் விசாரிப்பு, டொனேஷன் போன்ற பெரும்பாலான விஷயங்கள் இந்த அறையிலேயே ஃபில்டர் செய்யப்பட்டுவிடும்.
அதைத் தொடர்ந்து இருக்கும் ஹாலில், ஈசனின் மடியில் இருக்கும் பார்வதி சிலைக்கு தங்கக் கவசம் சாத்தப்பட்டு இருக்கிறது. நித்தியானந்தர் பிடதியில் இருந்தால், தினமும் காலை 8 மணிக்கு இந்த ஹாலுக்கு வருவார். அங்கே உள்ள சிலைகளுக்கு சுமார் அரை மணி நேரம் பூஜை செய்வார். பூஜை முடிந்த பிறகு, நித்தி அங்கேயே அமர்ந்துகொள்வார். பக்தர்கள் வரிசையில் நிற்க... ஒவ்வொருவராக அழைத்து தலையைத் தடவிக் கொடுத்து ஆசீர்வாதம் செய்வார்.
இந்த ஹாலுக்குப் பின்பக்கத்தில் 600 வருடங்கள் பழமையானதாகச் சொல்லப்படும் ஆலமரம் ஒன்று இருக்கிறது. இந்த ஆலமரமத்துக்கு அடியில்தான் நித்திக்கு ஞானம் கிடைத்ததாகச் சொல்வார்கள். ஆலமரமத்துக்குப் பக்கத்தில் தட்சிணாமூர்த்தி சிலை இருக்கிறது. அதிகாலை 5 மணிக்கெல்லாம் இந்த ஆலமரத்தைச் சுற்றி, நித்தி வாக்கிங் போவார். அதன்பிறகு அங்கேயே சற்று நேரம் தியானத்திலும் ஆழ்ந்து விடுவார். நித்திக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம், இந்த ஆலமரத்துக்கு அடியில் வந்து ஹாயாக அமர்ந்து கொள்வார்.
'எத்தனையோ வசதிகள் இருந்தாலும் இந்த ஆல மரத்தடியில் உட்காருவதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு...’ என்று நித்தியே அவரது அடிப்பொடிகளிடம் அடிக்கடி சொல்வார். ஆலமரத்துக்கு இடதுபுறத்தில் இருக்கும் ஒரு நீண்ட அறை முழுக்க, நித்தி சிறு வயதில் பயன்படுத்திய பொருட்கள், புகைப்படங்களை வைத்திருக்கிறார்கள். அதோடு நித்தி உட்காந்து ஆசி வழங்குவதைப் போன்ற ஒரு மெழுகுச் சிலையும் இருக்கிறது.
சற்றுத் தள்ளி இருக்கிறது ஆனந்தக்கூடம். நித்திக்காக பிரமாண்ட நாற்காலி, ஃபோகஸ் லைட், வீடியோ கேமராக்கள் என்று பக்காவான செட் அமைப்போடு இருக்கிறது. நித்தி பத்திரிகையாளர்களை சந்திப்பதும், உரை நிகழ்த்துவதும் இந்தக் இந்தக் கூடத்தில்தான்.
இந்த கூடத்துக்கு எதிரில்தான் டைனிங் ஹால். காலை தொடங்கி இரவு வரை யார் ஆசிரமத்துக்குப் போனாலும், சாப்பாடு உண்டு. வரிசையாக அடுக்கி இருக்கும் சில்வர் தட்டை எடுத்துக்கொண்டு, வேண்டி​யதைச் சாப்பிட்டு, தட்டைக் கழுவி வைக்க​வேண்டும். இங்கே சமைக்கப்படும் உணவில் வெங்​காயம், பூண்டு சேர்க்க மாட்டார்கள். (கிளர்ச்சியை ஏற்படுத்தாமல் இருக்க!)
ஆசிரமத்தில் குடும்பத்தோடு வந்து தங்கி இருப்பவர்களுக்கு தனியாக ஒரு குடியிருப்பும், பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு இன்​னொரு பகுதியிலும் இடம் ஒதுக்கி இருக்கிறார்கள். குடும்பத்தோடு இருப்பவர்கள் இல்லற வாழ்க்கையில் ஈடுபடலாம். ஆனால், பகல் நேரத்தில் ஆசிரமத்தில் சேவை செய்ய வேண்டும்.
பிரம்மச்சரியத்தை ஏற்க விரும்புபவர்களுக்கு பல சோதனைகள் வைக்கப்படும். அந்தச் சோதனைகளில் வெற்றி பெறாதவர்களுக்கு பிரம்மச்சரியம் கொடுப்பது இல்லை. பிரம்மச்சரியம் ஏற்ற ஆண்களை 'மஹாராஜ்’ என்று அழைக்கிறார்கள். பெண்களை, 'ம்மா’ என்கிறார்கள். ஆசிரமத்தில் தங்கி இருக்கும் பிரம்மச்சாரிகளில், இன்ஜினீயர்கள், டாக்டர்கள், பேராசிரி​யர்கள் என்று பெரும்பாலும் மெத்தப் படித்த​வர்கள்தான் அதிகம். அவரவர் படித்த படிப்புக்கு ஏற்ப வேலைகள் பிரித்துக் கொடுக்கப்படுகின்றன.
இங்கிருந்து சற்றுத் தள்ளி ஒதுக்குப்புறமாகத்தான் நித்தி தங்கும் அறை இருக்கிறது. நித்திக்கு எல்லாமுமாக இருக்கும், மூன்று மஹாராஜ்கள் மட்டும்தான் இந்த அறைக்குள் போய்வர முடியும். நித்ய பிரவானந்தா, நித்ய ஞானானந்தா, நித்ய ரூபானந்தா ஆகியோர்தான் அந்த மூன்று மஹாராஜ்கள். மூவருமே சேலம் விநாயகா மிஷன் பல் மருத்துவக் கல்லூரியில் படித்த பல் டாக்டர்கள். சேலத்தில் நித்தியானந்தரின் சொற்பொழிவைக் கேட்டு, அவரது கொள்கைகள் பிடித்துப்போனதால் படிப்பை முடித்த கையோடு ஆசிரமத்தில் சேர்ந்தவர்கள்.
நித்தி விருப்பப்பட்டால் மட்டுமே அவரது அறைக்குள் புதியவர் எவரும் நுழைய முடியும். ஆனால் இப்போது, நித்தியின் அனுமதி இல்லாமலே கர்நாடகப் போலீஸ் நுழைந்து விட்டது!

  கைதுக்குக் காரணம் ஜெயேந்திரர்?
நித்தியின் ஆசிரமத்தை சீல் வைக்கும் அளவுக்கு நிலைமை போனதற்கு, முக்கியக் காரணம் என்று ஜெயேந்திரரைக் கை காட்டுகிறார்கள், நித்தியின் சீடர்கள். ''ரஞ்சிதாவைப் பற்றி ஜெயேந்திரர் அவதூறாகப் பேசினார். அதற்காக ரஞ்சிதா, அவர் மீது வழக்கு தொடர்ந்தார். ரஞ்சிதா தொடர்ந்த வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி ஜெயேந்திரர் தரப்பில் பலமுறை பேசினார்கள். ஆனால் சுவாமியோ, 'அது பத்தி எனக்குத் தெரியாது. அது ரஞ்சிதா சம்பந்தப்பட்ட விஷயம்’னு தெளிவாகச் சொல்லி விட்டார். இதில் ஜெயேந்திரருக்கு ரொம்பவும் கோபம். கர்நாடக முதல்வர் கவுடா, ஜெயேந்திரரின் தீவிர பக்தர். அதனால் ஜெயேந்திரர்தான் நடவடிக்கை எடுக்கத் தூண்டி இருக்கிறார். கர்நாடக முதல்வரும், உண்மையை விசாரிக்காமல் ஆசிரமத்துக்குச் சீல் வைக்கச் சொல்லி உத்தரவு போட்டு விட்டார். எங்க சுவாமியின் சக்தி என்னன்னு அவருக்குத் தெரியலை, இனி போகப் போகப் புரிந்து கொள்வார்'' என்று ஆத்திரப்படுகிறார்கள் நித்தி சீடர்கள்

No comments:

Post a Comment