Wednesday, July 25, 2012

கொள்கையை குழிதோண்டிப் புதைக்கும் தா.பா.!மூத்த கம்யூனிஸ்ட் குமுறல்!


எதிர்பார்ப்புகள் எதுவும் இன்றி 35 ஆண்டுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்காக உழைத்தவர். 'தமிழர் சிந்தனை மரபு’, 'கார்ல் மார்க்ஸ்’, 'தமிழக வரலாற்றுக் கண்ணோட்டங்கள்’, 'தமிழர் தத்துவம்’, 'தமிழர் வரலாறு சில கேள்விகளும், தேடல்களும்’ என்பது உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். மூத்த கம்யூனிஸ்ட் தோழரான தேவ.பேரின்பன், கம்யூனிஸ்ட் கட்சியுடனான தன் நீண்டகால பந்தத்தை சமீபத்தில் அறுத்துக் கொண்டிருக்கிறார். அவரை இப்படி ஒரு திடீர் முடிவெடுக்கத் தூண்டியது, தா.பாண்டியன் நிர்வாகம்தான் என்பதே குற்றச்சாட்டு.
இதுகுறித்து, தேவ.பேரின்பனைச் சந்திக்கச் சென்றபோது உச்சகட்ட விரக்தியும் வேதனையு மாகப் பேசினார்.
''கல்லூரிப் படிப்பு முடிந்ததும் முழுநேர ஊழியனாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தேன். 30ஆண்டுகள் தொடர்ந்து கட்சிப் பணியைச் செய்திருக்கிறேன். கட்சி வாழ்க்கைதான் என் சொந்த வாழ்க்கை என வாழ்ந்தேன். கட்சிப் பெயரைப் பயன்படுத்தி பத்து பைசா கூட ஆதாயம் தேடிக்கொண்டதில்லை. என்னை நம்பி கட்சி கொடுத்த பொறுப்புகளைத் தாங்கி நேர்மையாகவும் முழு ஈடுபாட்டுடனும் செயல்பட்டு இருக்கிறேன். ஆனால், கட்சியின் மாநிலச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் தா.பாண்டியனால் அப்படி தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்ள முடியுமா?
1986-ல் இடதுசாரிக் கொள்கையை எதிர்த்து தா.பாண்டியன் உள்ளிட்ட சிலர் ஐக்கிய பொது வுடைமைக் கட்சியை உருவாக்கினர். பிறகு, 2000-ல் நல்லகண்ணு முடிவின்படி தீர்மானம் நிறைவேற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியோடு இணைந்தார் தா.பா.  உள்ளே வந்து விட்டாலும் தா.பாண்டியன் குழுவினர் அரசியல் ரீதியாக எங்களோடு ஒட்டாமல் தனிக்குடித்தனம்தான் நடத்தினார்கள். இதெல்லாம்தான் 2005-ல் திருவாரூர் மாநாட்டில் தா.பாண்டியனை மாநிலச் செயலாளராக்க நடந்த முயற்சியின்போது, 'தேர்தல் நடத்த வேண்டும்' என்று சொல்ல எங்களைத் தூண்டியது.
ஆனாலும், பாண்டியன் மாநிலச் செயலாளர் ஆகிவிட்டார். அதுதான் சி.பி.ஐ. கட்சியின் வீழ்ச்சிக்கு முதல் செங்கல்லை உருவிய நாள். பதவிக்கு வந்தது முதலே, உட்கட்சித் தேர்தலில் தன்னை எதிர்த்த எல்லோரையும் காலி செய்யும் வேலையைத் தொடங்கினார். தவறான முடிவுகள் எடுக்கப்படும்போது கூட எங்களைப் போன்றவர்கள் கருத்துச் சொல்ல தடை விதிக்கப்பட்டது. நான் கட்சிக்குள் வந்த நேரம், தர்மபுரி - கிருஷ்ணகிரி இரண்டையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தில் சி.பி.ஐ-யின் உறுப்பினர் எண்ணிக்கை 500தான். பல்வேறு வர்க்கப் போராட்டங்களை நடத்தி, சில ஆண்டுகளில் 500 கிளைகளுடன் கூடிய கட்சியாக அங்கே கட்சியை வளர்த்தெடுத்தோம். தமிழகம் முழுக்கவே இப்படித்தான் கட்சியை உண்மைத் தொண்டர்கள் வளர்த்தனர். ஆனால், தா.பாண்டியன் கம்பெனியோ, உறுப்பினர் சேர்க்கையில் போலித்தனத்தைப் புகுத்தி பிரமாண்டம் எனும் மாயத்தோற்றத்தை உண்டாக்கியது. நேர்மையான, கொள்கைப் பிடிப்பு கொண்டவர்களை மட்டுமே கட்சியில் சேர்ப்பது என்ற கொள்கையை இதற்காகக் கைகழுவினர். இன்று, கொலைப்பழி சுமந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன், லகு மய்யா போன்றவர்கள் கட்சிக்குள் நுழைய வழி செய்ததும் இந்த மாயத்தோற்ற அணுகுமுறைதான். இதெல்லாம் தெரிந்திருந்தும் தேசியத் தலைமை, மாநில நிர்வாகிகளின் போக்கைக் கண்டிப்பதே இல்லை. என் பெரும் அபிமானத்துக்கு உரியவராக இருந்த நல்லகண்ணுவும் இத்தகையவர்களைக் கண்டு கொள்ளாமல் விட்டது இன்னொரு வருத்தம்.
தா.பா- தலைமை ஏற்ற பிறகு, கட்சியின் பிரதான கொள்கைகளான மதச்சார்பற்ற தன்மை, வர்க்கப் போராட் டம், சாதி மறுப்பு போன்றவை இருந்த இடம் தெரியாமல் போனது. இதை எதிர்த்து அவ்வப்போது குரல் எழுப்பிய என் போன்றவர்கள் மீது பல்வேறு நெருக்கடிகளைக் கட்டவிழ்த்தார் பாண்டியன்.
2008-ல் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் புத்தகத்தை நல்லகண்ணு தலைமை யிலான குழு எடுத்த முடிவின்படி மொழிபெயர்த்தேன். புத்தகம் முழுவதும் விற்றுத் தீர்ந்த பிறகு 2011-ல், 'என் அனுமதி இல்லாமல் அந்தப் புத்தகத்தை எப்படி நீ மொழிபெயர்க்கலாம்..?’ என்று பிரச்னையைக் கிளப்பி, என்னுடைய மொழி பெயர்ப்புப் பணிக்கும் தடை போட்டார். மேலும், அடுத்த ஆறு மாதத்தில் செயற்குழுவில் இருந்து என்னை நீக்கினார். கருத்துச்சுதந்திர பறிப்பையும், கட்சியின் நேர்மையற்ற வரவு-செலவுக் கணக்கையும் கண்டித்துப் பேசினேன்.
உடனே என்னை சாதாரண உறுப்பினராக்கி, கட்சியின் செயல்பாடு எதையும் கண்டிக்க எனக்கு அதிகாரம் இல்லாமல் செய்ய வேண்டும் என்பது பாண்டியனின் நோக்கம். லட்சியப் பிடிப்புக்காக கட்சியில் இருந்தவன் நான், கம்யூனிஸ லட்சியங்களைக் குழிதோண்டி புதைத்த ஒரு கட்சியில் இனி நீடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நானே வெளியேறி விட்டேன்.
கட்சிக்குள் முதலாளித்துவத்தை வளர்த்துக் கொண்டிருக்கும் தா.பாண்டியனால் பெரிய வரலாறு கொண்ட கட்சி பலவீனப்பட்டு, பலியாகி விட்டது..'' என்று கொட்டித் தீர்த்தார்.
இங்கு மட்டுமல்ல... இப்படி பல்வேறு மாவட்டங்களில் தா.பாண்டியனுக்கு எதிரான உள்ளக்குமுறல்கள் கட்சிக்குள் உருவாகி வருவதைப் பார்க்க முடிகிறது!
பாண்டியன் பதில் என்ன? காத்திருக்கிறார்கள் கட்சியின் தொண்டர்கள்!

No comments:

Post a Comment