Wednesday, July 4, 2012

ஜெகனை மீட்பதற்குப் பேரம் நடக்கிறதா? விறுவிறு விஜயம்மா


கன் கைகளில் விலங்​குகள் பூட்டப்​பட்​டிருக்க, தாய் கண்​ணாம்பா பக்கம் பக்கமாய் வசனம் பேசி, 'மனோகரா’ படத்தில் சபதம் எடுப்பார். அது​போலவே, தன் மகன் ஜெகன் மோகன் ரெட்டியின் கைகளில் விலங்கு மாட்​டப்பட்டதும், சபதம் எடுத்துக்​கொண்டு அரசியல் களத்தில் குதித்தார் விஜயம்மா. சொன்​னபடியே, ஆட்சியில் இருக்கும் ஆந்திர காங்கிரஸ் கட்சியை அடித்துத் துவைத்துக் காயப் போட்டு விட்டார். 
எந்த ஜோடனையும் இல்​லாமல் வெள்ளந்தியாகவே பேசுகிறார் விஜயம்மா...
''இந்த அளவுக்கு வெற்றி​யை எதிர்பார்த்தீர்​களா?''
''என்னுடைய ஒரே பலம் என் மகன் ஜெகன்தான்.அவரை வேண்டும் என்றே தேர்தலுக்கு முன்னரே, திட்​டமிட்டு வேட்டையாடி​யது காங்கிரஸ். அதை எதிர்த்​துத்தான் போ​ராடி​னேன். அந்த 21 நாட்களும்சரி​யாக சாப்பிட்​டேனா... தூங்கினேனா என்றுகூட தெரியவில்‌லை. என் மகள் ஷர்மிளா, ஸ்கூலுக்குப் போகிற தன் பிள்ளைகளை பெங்களூருவில் தனியாக விட்டுவிட்டு, என்னுடன் ஆந்திரா முழுக்க‌ வெயிலில் கடுமையாகப் பிரசாரம் செய்தார். தேர்தல் நெருங்க நெருங்க ஏகப்பட்ட மிரட்டல்கள், போலீஸ் கெடுபிடிகள். நெல்லூரில் தொண்டை கட்டிய நிலையிலும் பேசிக்கொண்டு இருந்த​போது கூட்டத்தில் இருந்து கல் எறிந்தார்கள். நல்லவேளையாக எதுவும் ஆகவில்லை. ஒவ்வொரு நாளும் வீட்டைவிட்டுக் கிளம்பும்போது, உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை உணர்ந்தே கிளம்பினேன். ஆனால் நான் கும்பிடும் தெய்வமும், மக்களும், ராஜண்ணாவும் (கணவர் ராஜசேகர ரெட்டி) என் பக்கம் இருந்தாங்க. அதனால்தான் இத்தனை பெரிய வெற்றி.''
''சந்திரபாபு நாயுடுவும் சிரஞ்சீவியும், 'இது அனுதாபத்தால் கிடைத்த வெற்றி’ என்று சொல்​கிறார்களே?''
''போட்டியிட்ட எட்டு தொகுதிகளிலும் டெபாசிட்டைப் பறிகொடுத்த சந்திரபாபு நாயுடுவுக்கு எங்களுடைய வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை. சிரஞ்சீவி தம்பி பாவம்... சொந்தமாக கட்சி ஆரம்பித்து, தன் ரசிகர்களையும் தொண்டர்களையும் 'அம்போ’னு விட்டுட்டு காங்கிரஸில் போய் செட்டில் ஆயிட்டார். டெல்லியில் திட்டு வாங்காமல் தப்பிக்கத்தான் இப்படி ஏதாவது சொல்வார். நம்பாதீங்க. மக்கள் ராஜண்ணாவின் ஆட்சியை விரும்புகிறார்கள் என்பதின் வெளிப்பாடுதான் இந்த வெற்றி.''
''காங்கிரஸ் கட்சியே உங்களுக்கு எதிரியாக மாறியது ஏன்?''
''காங்கிரஸை ஆட்சியில் அமர்த்துவதற்காக முழங்கால் வலியோடு பொட்டல் வெயிலில் ஆந்திராவின் அத்தனை மூலைக்கும் பாத யாத்திரை போனார் ராஜண்ணா. 37 வருடங்களாக காங்கிரஸ் கட்சிக்காக வியர்வை சிந்தியவர், கடைசியில் அந்தக் கட்சிக்காகவே ரத்தமும் சிந்தி செத்துப்போனார். காங்கிரஸையும் பெரிய குடும்பத்தையும் (சோனியாவின் குடும்பம்) எந்த அளவுக்கு அவர் நேசித்தார் என்பது என்னைவிட ஆந்திராவின் அடிமட்ட காங்கிரஸ் தொண்டனுக்கு நன்றாகவே தெரியும். 'ராகுல் காந்தியை 2014-ல் பிரதமர் ஆக்க வேண்டும்’ என்று முதலில் வெளிப்படையாகச் சொன்ன முதல்வர் ராஜண்ணாதான். அப்படிப்பட்டவரைப் பறிகொடுத்து விட்டேன். அவரது உடலுக்கு முன்னால் நின்றுகொண்டு சோனியா காந்தி, 'நான் இருக்கேன்... அழாதீங்க. மிஸ்டர் ரெட்டி செய்ய வேண்டியதை நான் செய்வேன். நீங்க அழுவது இதுவே கடைசியாக இருக்கட்டும்’ என்று என் கையைப் பிடித்துச் சொன்னார். சத்தியம் செய்யாத குறைதான். ஆனால் அன்னையாக நினைத்த என்னை, இதுவரை அழ மட்டுமே வைத்திருக்கிறார் சோனியா. இதுநாள்வரை அவரை நான் எதிரியாக நினைத்ததே இல்லை. ஆனால், என் ஒரே மகனை வேண்டும்என்றே வேட்டையாடினால் சும்மா விடுவேனா?''
''அப்படியென்றால், உங்கள் ஆதரவு எம்.எல்.ஏ-க்களைக்கொண்டு காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்ப்பீர்களா?''
''ஒருபோதும் அப்படி ஒரு கீழ்த்தரமான அரசியலை நடத்த மாட்டோம். அப்படி நினைத்திருந்தால்,எப்போதோ ஆட்சியைக் கவிழ்த்திருக்க முடியும். நானும் ஜெகனும் மக்களை நம்பி இருக்கிறோம். மற்றதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அதே நேரத்தில், காங்கிரஸ் ஏற்படுத்தும் அத்தனை நெருக்கடிகளையும் சகித்துக்கொண்டு சும்மா இருக்கவும் மாட்டோம். 2014-ல் ராகுல் காந்தி​யின் திட்டங்களைக் காலி பண்ணி, ராஜண்ணா ஆட்சியை நிறுவுவோம். அதற்காக இப்போதே உழைக்கத் தயாராகி விட்டோம்!''
''ஜெகன் மீதான ஊழல் குற்றச்சாட்டு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்​தது​​ போன்ற‌ புகார்களுக்கு  உங்கள் பதில் என்ன?''
''நாங்கள் சுரங்கத் தொழிலை ராஜண்ணா உயிருடன் இருந்த காலத்திலேயே நடத்திக்​கொண்டுதான் இருக்கிறோம். அவர் இருந்தபோது கண்ணுக்குத் தெரியாத ஊழல், இப்போது மட்டும் காங்கிரஸின் கண்ணுக்குத் தெரிகிறதா? ஜெகன் மீதும், என் கணவர் மீதும் ஆயிரம் குற்றச்சாட்டுகளை அடுக்கட்டும், வழக்குகளைப் போடட்டும். அதை எல்லாம் சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். எங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் தீர்ப்பைப் பெற்று விட்டோம். அம்​பேத்கரின் சட்டத்தின் மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அங்கேயும் ஜெயித்​துக் காட்டுவோம்.''
''ஜெகனை மீட்பதற்காக ஒய்.எஸ்.ஆர் காங்​கிரஸை மீண்டும் காங்கிரஸோடு இணைக்கப் பேரம் நடக்கிறது என்று சொல்லப்​படுவது உண்மையா?''
''பிரதமருக்கும், சோனியாவுக்கும், குடியரசுத் தலைவருக்கும், 'ஜெகனை மீட்டுத் தாருங்கள்’ என்று நான் எழுதும் கடிதங்களை வைத்து, ஆந்திர அரசியல்வாதிகள் அவிழ்த்துவிடும் கட்டுக்​கதை இது. இப்போதுகூட பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டு இருக்​கிறேன். ஆனால் உடைந்த கண்​ணாடிகள் என்றுமே ஒட்டாது!'' என்றார் உறுதியோடு!

No comments:

Post a Comment