Wednesday, November 7, 2012

மதுரை ஆதினத்திற்கு போட்டியாக புதிய தியான பீடம். நித்தியின் அடுத்த அதிரடி திட்டம்.



மதுரை ஆதீனம் நம்பர் 293-வாக நியமிக்கப்பட்ட நித்தியை டிஸ்மிஸ் செய்துவிட்டார் அருணகிரி நாதர் என்பது பழைய செய்தி. ஆனால், அந்த ஆதீனத்துக்கு நிகரான ஒரு தியான பீடத்தை மதுரையில் தொடங்க இடம் பார்க்கிறார் நித்தி என்பது புதிய செய்தி!

நித்தியையும் அருணகிரிநாதரையும் வெளி​யேற்றி ஆதீன மடத்தை அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரக்கோரி மதுரை மீனாட்சி பிள்ளைகள் அமைப்பின் தலைவர் ஜெகதலபிரதாபன் தொடர்ந்த வழக்கில், கூடுதல் விளக்கம் பெறுவதற்காக 30-ம் தேதி விசாரணை நடந்தது.

அப்போது, அருணகிரிநாதருக்காக ஆஜ​ரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன் (நித்திக்கும் இந்த வழக்கில் இவர்தான் வக்கீலாம்!), நித்தியானந்தரை நீக்கி விட்டது குறித்த தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட ஜெகதலபிரதாபனின் வக்கீல் என்.ஆர்.சந்திரன், 'நித்தியானந்தா நீக்கத்தை முறைப்படி அருணகிரிநாதர் அரசுக்குத் தெரிவித்து இருக்கிறாரா?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, 'நீக்கம் குறித்து இதுவரை எந்தக் கடிதத்தையும் அரசுக்கு அவர் அனுப்பவில்லை’ என்று பதில் கொடுத்தார் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன். நித்திக்காகப் பதி லளித்த ராஜகோபாலன், 'நித்தியானந்தாவை நீக்கிவிட்டதாக அருணகிரிநாதர் நேற்றுதான் நித்தியானந்தாவுக்கு தபாலில் கடிதம் அனுப்பி இருக்கிறார். அது கிடைத்ததும், விஷயங்களைப் படித்துப் பார்த்து ஏற்றுக்கொள்வதா அல்லது மேல்நடவடிக்கைக்குப் போவதா என்பதை நித்தி யானந்தா முடிவு செய்வார்’ என்று சொன்னார்.


31-ம் தேதி காலையில் முதல்வழக்காக இந்த வழக்கின் தீர்ப்பை எழுதிய நீதிபதிகள், 'நித்தி யானந்தா நீக்கத்தை இந்தக் கோர்ட் பதிவுசெய்கிறது. ஆதீனங்களில் அசாதாரணமான சூழ் நிலைகள் ஏற்படும்போது யாருக்​காகவும் காத்துக்கொண்டு இருக்காமல் இந்து அறநிலையத் துறை ஆணையரே நேரடியாகத் தலையிட்டு, சம்பந்தப்​பட்ட மடாதிபதியைத் தகுதி நீக்கம் செய்துவிட்டு மடத்தைக் கையகப்​படுத்துவதற்கு ஆந்திர அரசின் இந்து அறநிலையத் துறை விதிகள் இருக்​கின்றன. அதேபோல், தமிழக அரசும் சில திருத்தங்களை மேற்​கொண்டு விதி முறைகளைக் கடுமையாக்க வேண்டும்’ என்று சொன்னார்கள். மேலும், 'ஆதீன மடத்தைக் கையகப்படுத்துவது தொடர் பான வழக்கு மதுரை சிட்டி சிவில் கோர்ட்டில் விசாரணையில் இருப்பதால், இந்த வழக்கின் மீது நாங்கள் என்ன தீர்ப்பு சொன்னாலும் அது சிவில் வழக்கின் விசாரணையைப் பாதிக்கும். எனவே, மடத்தைக் கையகப்படுத்தும் விவகாரத்தில் விசா ரணை நடத்தி தீர்ப்பு சொல்லும் பொறுப்பை சிவில் நீதிமன்றத்திடம் விடுகிறோம்’ என்று சொன் னார்கள் நீதிபதிகள்.

இந்தத் தீர்ப்பு குறித்து இந்து அறநிலையத் துறை ஆணையர் தனபாலிடம் பேசினோம். ''இந்து அறநிலையத் துறை ஆக்ட்டில் சட்டத் திருத்தம் கொண்டு வரணும்னு கோர்ட்டில் ஆர்டர் ஆகி இருப்பதாக சொன்னார்கள். அந்த உத்தரவு நகல் கிடைத்த பிறகு உரிய நடவடிக்கைகளை எடுப் போம். மதுரை சிவில் கோர்ட்டில் விசாரணையில் இருக்கும் வழக்கையும் முறையாகத் தடங்கல் இன்றி நடத்தி ஆதீன மடத்தை அறநிலையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவர நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு மத்தியில், மதுரை ஆதீனத்தின் அடுத்த பட்டத்துக்கு ஆள் தேடும் வேலைகளில் சைவ ஆதீனங்கள் சிலர் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து ஒரு தம்பிரானை மதுரை ஆதீன மடத்தின் அடுத்த பட்டத்தில் உட்காரவைக்கவும் சிலர் முயற் சிப்பதாகச் சொல்கிறார்கள்.

இதனிடையே, மதுரை ஆலம்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர், தன்னைத்தான் மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதியாக நியமிக்க வேண்டும் என்று தமாஷ் பண்ணுகிறார். ''எனக்கு 56 வயசாகுது; கட்ட பிரம்மச்சாரி. நான்கு எம்.ஏ., பட்டம் வாங்கி எம்.ஃபில் முடிச்சிருக்கேன். சைவ வெள்ளாளர் குலத்தில் பிறந்த எனக்கும் ஆதீன மடத்துக்கும் 25 வருடங்கள் தொடர்பு இருக்கு. 2009-ல், என்னை இளைய பட்டமாக நியமிக்கக்கோரி அருணகிரிநாதருக்குக் கடிதம் எழு தினேன். அவர் பதிலே சொல்லலை. அதனால், இந்துஅறநிலையத் துறை ஆணையருக்கு எழு தினேன். அவங்க அருணகிரிநாதரிடம் கேட்டதுக்கு, 'மாரிமுத்துக்கும் இந்த மடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ன்னு பொய் சொல்லியிருக்கிறார். அதன்பிறகு, என்னைக் கூப்பிட்டு, 'நீ நிறையப் படிச்சிருக்கே, உனக்கு சமயத் தொடர்பு வேண்டாம்; வேற வழியில போ’ன்னு அட்வைஸ் செய்தார். இப்ப நித்தியானந்தாவை நீக்கிட்டதால் அனைத்​துத் தகுதியும் கொண்ட என்னை இளைய பட்டமா அறிவிக்கணும்னு அவருக்குக் கடிதம் எழுதி இருக்கேன்'' என்கிறார் மாரிமுத்து. இவரைப்பற்றி கேட்​டதற்கு, ''அந்தாளு ஒரு வெட்டித்தனமான ஆளு. ஒரு நாள்கூட மடத்துப் பக்கம் வந்ததில்லை. சும்மா புரளியைக் கிளப்பிக்கிட்டு இருக்கார். வீ இக்னோர் தெட் ஃபெலோ'' என்று நம்மிடம் பொழிந்தார் ஆதீனம்.

இதனிடையே, ஜெகதலபிரதாபனுக்குத் தூது அனுப்பிய நித்தியின் ஆட்கள், 'மதுரை ஆதீ னத்​தை விட்டு விலகி விட்டோம். மதுரையில் பெரியஅளவில் தியான பீடம் ஒன்றை நிறுவ இடம் தேடுகிறோம். அதுக்கு இடைஞ்சல் ஏதும் பண்ணீடாதீங்க’ என்று கோரிக்கை வைத்தார்களாம். மதுரையில் பெரியஅளவில் தியான பீடத்தைத் தொடங்கி அருணகிரிநாதருடன் டீல் போட்டுக் கொள்வார்களாம். சமயம் பார்த்து மீண்டும் மதுரை மடத்துக்குள் நுழைவதுதான் நித்தியின் தொலை நோக்குத் திட்டமாம்!

திரும்பவும் முதல்ல இருந்தா..?

No comments:

Post a Comment