Friday, November 18, 2011

ஈரான் அணு ஆயுத கட்டமைப்புகளை அழிக்க பங்கர் அழிப்புக் குண்டுகளை தயார்படுத்தும் அமெரிக்கா!

ஈரானின் அணு ஆயுதக் கனவுகளை தரைமட்டமாக்கும் வகையில், அதன் அணு ஆயுத கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய இடங்களைத் தகர்ப்பதற்காக அமெரிக்கா பங்கர்களை அழிக்கும் குண்டுகளை ஆயத்தப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதை பென்டகன் மறுத்துள்ளது.




மிக அபாயகரமான இந்த குண்டுகள் அதல பாதாளத்தில் அமைக்கப்பட்டுள்ள, மிகுந்த பாதுகாப்புடன் கூடிய, எந்த வகையான ரகசிய இடங்களையும் கூட தரைமட்டமாக்கி விடும் தன்மை படைத்தவை. Massive Ordnance Penetrator எனப்படும் இந்த வகை குண்டுகளை அமெரிக்கா தனது அதி நவீன B-2 குண்டு வீச்சு விமானத்தில் பொருத்தக் கூடிய வகையில் ஆயத்தப்படுத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

அணு ஆயுத கட்டமைப்புகள், ஆயுதக் கிட்டங்கிகள் என ஈரானின் முக்கிய நிலைகளை அழித்தொழிப்பதற்காகவே இந்த வேலையில் அமெரிக்கா இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில், இஸ்ரேல்தான் இந்த வேலைகளைச் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஈரான் அணு ஆயுத திட்டங்களை ஆரம்ப நிலையியேலே அழித்து விட இஸ்ரேல் திட்டமிட்டிருப்பதாகவும், தாக்குதலை நடத்தி ஈரானை நிலைகுலையச் செய்ய அது முயல்வதாகவும் தகவல்கள் கூறின.


இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஈரான் மீது யாராவது கைவைத்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று ரஷ்யா எச்சரித்திருந்தது.

இந்த நிலையில்தான் அமெரிக்கா, பங்கர் அழிப்பு குண்டுகளை தயார்படுத்தும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குண்டுகளை வாங்குவதற்காக போயிங் நிறுவனத்துடன் அமெரிக்க விமானப்படை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாம். முதலில் 20 குண்டுகள் வாங்கப்படவுள்ளதாம். அதில் முதல் டெலிவரி கடந்த செப்டம்பரில்நடந்துள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. ஆனால் அது ஈரானை குறி வைத்து வாங்கப்படவில்லை என்றும் பென்டகன் விளக்கியுள்ளது.

இதுகுறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், பங்கர்கள் அழிப்பு குண்டுகள் வாங்கப்படுவது உண்மைதான். ஆனால் எந்த நாட்டையும் குறி வைத்து அதை நாங்கள் வாங்கவில்லை. எங்களது திறமையை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவே இதை நாங்கள் செய்கிறோம்.

ஒரு எதிரியை அழிக்க, எதிரியின் ஆயுத பலத்தை அழிக்க இந்த வகை குண்டுகள் அவசியம். குறிப்பாக மக்களை கொத்துக் கொத்தாக பெருமளவில் அழிக்க வகை செய்யும் வைத்திருக்கும் எதிரிகளை அழிக்க இந்த வகை குண்டுகள் நமக்குத் தேவை என்றார் அவர்.

No comments:

Post a Comment