Monday, November 14, 2011

டூ வீலரை துரத்தும் 'வலி'கள்!


ருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு முதுகுவலியும், கழுத்துவலியும் அழையா விருந்தாளிகளாக தானாகவே வந்து விடுகின்றன. ''வாகனத்தின் நிறத்துக்கும், அழகுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவாவது, வாகனத்தை ஓட்டும் முறைக்கும், நம் உடலுக்கும் கொடுத்தால், வலிகள் வராமலே தடுத்துவிடலாம்'' என்கிறார் பிசியோதெரபிஸ்ட் பிரேம்குமார்.

''வாகனம் ஓட்டும்போது, கழுத்து, இடுப்புப் பகுதிக்கு முன்னும் பின்னும் இருக்கிற தசைப் பகுதிதான் நம் உடலை உறுதியாக வைத்துக் கொள்ள உதவி புரிகிறது. இந்த இரண்டு தசைப் பகுதிகளும் ஒன்றுக்கொன்று உறுதுணையாகச் செயல்பட வேண்டும்.

பொதுவாகவே, உடல் தசைகளின் அமைப்பு முறைப்படி வேலை செய்யச் செய்யத்தான் அதன் உறுதித்தன்மை அதிகரிக்கும். நாம் வாகனம் ஓட்டும்போது, எதிர்காற்றைக் கிழித்துக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இந்தச் சமயத்தில் காற்று நம்மைப் பின்னோக்கித் தள்ளும். அப்போது நமது உடலின் பேலன்ஸ் மாறும். இதைச் சரி செய்வதற்கு, நாம் உடலை முன்னோக்கித் தள்ளுவோம். இதனால், நம் முன் பக்க தசை அதிக அளவில் முன்னோக்கி வேலை செய்யும். அந்தச் சமயத்தில், பின் பக்க தசைகளுக்கான வேலைப் பளு குறைவாகவே இருக்கும். இப்படி, பின் பக்க தசைப் பகுதி ஓய்வு நிலையிலேயே இருப்பதால், அதன் உறுதித் தன்மையை இழந்து, முதுகெலும்புகளுக்கு மத்தியில் இருக்கக் கூடிய இணைப்புகள் சரிவர செயல்பட முடியாத நிலை உருவாகிவிடும். இதன் காரணமாக, முதுகெலும்புகளுக்கு இடையில் உள்ள சிறு துவாரத்திலிருந்து வெளிவரும் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகும்.

மேலும் இடுப்பையும், கழுத்தையும் சுற்றி இருக்கிற தசைப் பகுதிதான், இடுப்புப் பகுதியிலுள்ள 5 பெரிய எலும்புகளுக்கும், கழுத்துப் பகுதியிலுள்ள 7 எலும்புகளுக்கும் பக்க பலமாக இருக்கிறது. இந்த இரண்டு பகுதிகளும் உறுதியாக இருந்தாலே வாகனம் ஓட்டுவதால் ஏற்படக்கூடிய 70 சதவிகிதப் பிரச்னைகளைத் தவிர்த்துவிட முடியும்'' என்றவர், வலிகளைக் தடுக்கும் வழி முறைகளையும் விளக்கினார்.

''இரண்டு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு இருவிதமான வலிகள் வரலாம். ஒன்று, தசை வலி; மன்றொன்று, முதுகு எலும்புகளிலுள்ள இணைப்புகள் தொடர்பானது. வலி ஏற்படும் போது, அது தசை வலியா அல்லது எலும்பு இணைப்புகள் தொடர்பான வலியா என்பதை நாமே எளிதில் கண்டுபிடித்துவிட முடியும்.

நம் கட்டை விரலைத் தவிர, மற்ற நான்கு விரல்களின் நுனிப் பகுதி தசையை அழுத்திப் பார்க்கவும். அதில் வலி ஏற்பட்டால் அது தசை வலி. அப்படி இல்லாமல் கைகள் மரத்துப் போனது போன்று தோன்றினால், கழுத்துப் பகுதியில் உள்ள ஏதோ ஒரு நரம்பு பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். இதேபோல், இடுப்பு முதல் பாதம் வரை வலியோ அல்லது மரத்துப் போனது போன்ற உணர்வோ இருந்தால், இடுப்புப் பகுதியிலுள்ள நரம்பு பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

தசை வலியாக இருந்தால், சுடு தண்ணீரால், வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்தே தசை வலியைச் சரி செய்து விடமுடியும். அதுவே மூட்டுகளில் வலியாக இருந்தால், பிசியோதெரபிஸ்டை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்'' என்றவர், வாகனம் ஓட்டுகிற முறையையும் விரிவாகக் கூறினார்.

''இன்றைய கல்லூரி மாணவர்கள் பைக் டேங்க் நோக்கி சாய்ந்த வண்ணம் ஓட்டுவது மாதிரியான பைக்குகளைத்தான் அதிகம் விரும்புகின்றனர். பைக்குகளும் ஸ்போர்ட்ஸ் மாடலிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. பைக்கினுடைய பவரையும், சிசி அளவையும் கவனிப்பவர்கள், வாகனத்தின் இருக்கையின் அமைப்பு தங்களுக்கு ஏற்றவாறு இருக்கிறதா என்பதைப் பார்க்க மறந்து விடுகின்றனர். குறிப்பாக, வயது அதிகமுள்ளவர்கள் முதுகை வளைத்து, சாய்ந்த வாக்கில் ஓட்டுவது என்பது முற்றிலும் தவிர்க்க வேண்டிய விஷயம். அதே போல், பைக் இருக்கையின் மிக முன்பாகவோ அல்லது மிகவும் பின்னாலோ அமர்ந்து ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும். தினமும் கழுத்து மற்றும் இடுப்புப் பகுதிக்கான பிரத்யேக உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் உடல் வலிப் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்'' என்றவர், அதற்கான உடற்பயிற்சிகளையும் கூறினார்.

வெறும் தரையில் நேராக மல்லாந்து படுத்துக் கொள்ளவும். பிறகு, இரண்டு முழங்காலையும் மடக்கி நெஞ்சோடு சில விநாடிகள் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு, காலை மடக்கியவாறே தரையில் வைக்கவும். இப்படி தினமும் பத்து முறை செய்து வந்தால், உடலின் பின் பக்கத் தசைகள் விரிவடைந்து, ரத்த ஓட்டமும் சீராகும்.

குப்புறப் படுத்துக்கொண்டு இரண்டு கைகளையும் நெற்றிக்குக் கீழாக வைத்துக் கொள்ளவும். பின்பு, ஒரு காலை மட்டும் நீட்டிக் கொண்டு, மற்றொரு காலைத் தூக்க வேண்டும். இதேபோல், அடுத்த காலையும் தூக்கி நீட்டவும். இப்படிச் செய்வதன் மூலம், இடுப்புப் பகுதியிலுள்ள தசைகள் வலுவாகும்.

சேரில் அமர்ந்தபடியே, இரண்டு தோள் பட்டைகளையும், மேலே உயர்த்தி, சில விநாடிகள் கழித்துக் கீழே இறக்கவும். தினமும் இந்தப் பயிற்சியை பத்து முறை செய்து வந்தால், கழுத்து தொடர்பான வலிகளை எளிதில் தவிர்க்க முடியும்'' என்றார் பிசியோதெரபிஸ்ட் பிரேம்குமார்.

No comments:

Post a Comment